வியாழன், 3 ஆகஸ்ட், 2017

சுரண்டல் பக்தி




ஆடி மாதம் பிறந்துவிட்டது; கோவில்கள் களை கட்டும். கூழ் காய்ச்சி ஊற்றுவது என்கிற பெயரால் வசூல் வேட்டை! காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு இந்தத் தொழில் மும்முரமாக நபெறுகிறது. பக்தர் போர்வையில் நெற்றியில் பட்டை, குங்குமப் பொட்டு, மார்பில் சந்தனமாக சிலர் - அவர்களுக்கு உடந்தையாக உள்ளூர் தாதாக்கள் சகிதமாக மக்களை மி(வி)ரட்டி பணம் பறிப்பது வாடிக்கையாகிவிட்டது.

சென்னையில் நடைபாதைகளில் ஆயிரக்கணக்கான கோயில்கள். உண்டியல்கள் அன்றாடம் உடைக்கப்பட்டு, அந்தப் பணத்தில் குடி மக்கள் நீந்தி மகிழ்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் கறாராக தீர்ப்பு வழங்கியும் கூட (நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் எம்.கே. சர்மா) நடைபாதைக் கோயில்கள் அகற்றப்பட வில்லை; மாறாக புதிய புதிய கோயில்கள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் குரங்கு சிலைகள் (ஹனுமான்) வைக்கப்பட்டு தான் வருகின்றன.

தொழில்களிலேயே அதிக முதலீடு இல்லாமல் கொள்ளை வருவாய் அடிக்கக்கூடியது பக்தித் தொழிலே.

இந்த வருமானத்துக்கு எல்லையும் கிடையாது, வருமான வரித் தொல்லையும் கிடையாது.

கூழ் காய்ச்சி ஊற்றுவது என்பது மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் தான் தோன்றியது.

50, 60 ஆண்டுகளுக்கு முன் அம்மை, காலரா என்கிற நோய்கள் படை எடுக்கும்! குடும்பம் குடும்பமாக கொத்திக் கொண்டு போகும்.

இவை நோய்கள் என்று கருதாமல், அம்மை நோய்க்குக் காரணம் மாரியம்மன் கோபம் என்று கூறி அந்தக் கோயிலிலும், காலராவிற்குக் காரணம் காளியாத் தாள் கடும் கோபம் என்று அந்தக் கோயிலிலும் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள், மாரியம்மன் தாலாட்டுப் பாடுவார்கள்.

பிற்காலத்தில் அம்மைக்கும், காலராவுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்த பின் அம்மை நோயும், காலரா நோயும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.

(பெரிய) அம்மை நோய் இருப்பதாகச் சொன்னால் ஆயிரம் ரூபாய் பரிசு என்று கூட அரசு அறிவித்த துண்டு.

அறியாமையின் பிடியில் மக்கள் கிடந்துழன்ற காலத்தில் மாரியம்மனுக்கும், காளியம்மனுக்கும் கூழ் காய்ச்சி ஊற்றியது எப்படியோ தொலையட்டும். அவை நோய்தான், குறிப்பிட்ட கிருமிகளால் வரக் கூடியது என்று கண்டறிந்து, தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து மக்கள் பயன் அடைந்த நிலையில், காலராவும் அம்மையும் காணாமல் போன நிலையில், இன்னும் இக்கோயில்களுக்குக் கூழ் காய்ச்சி ஊற்றுவது என்றால், அது நிச்சயமாக ஊரை ஏமாற்றி உலையில் போடுவதுதான்!

சுரண்டலே, உன் பெயர் தான் பக்தியா?


5.7.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக