வியாழன், 3 ஆகஸ்ட், 2017

விடைத்தாள்





தமிழ்நாட்டில் +2 தேர்வில் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் 80 ஆயிரம் பேர்கள். இதில் 1500 மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. ஒரு மாணவிக்கு இயற்பியல் பாடத்தில் 59 மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளதாம், எப்படி இருக்கிறது?

திண்டிவனத்தைச் சேர்ந்த தேவசேனா என்ற இந்த மாணவியின் பிரச்சினை என்ன? எப்படி 59 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன?

வேறொரு மாணவியின் குறைந்த மதிப்பெண்ணை இவரின் மதிப்பெண்ணாக மாற்றி விட்டார்கள்; இதுதான் நடந்த குழப்பம்.

இந்த மாணவி மட்டும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்காமல் போயிருந்தால் அவரின் எதிர்காலமே பாதித்து இருக்காதா? அவர் விரும்பிய கல்வியைப் பெற்று இருக்க முடியாதே!

எட்டு லட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதுகிறார்கள். முப்பதாயிரம் ஆசிரியர்கள் திருத்துகிறார்கள். ஒரு விடைத் தாளைத் திருத்துவதற்கு ஆசிரியருக்கு 7 ரூபாய் 50 காசுகள் அளிக்கப்படும். இதைத் தவிர நாள் ஒன்றுக்கு பயணப்படி வேறு; ஒரு ஆசிரியர் திருத்துவதை சரி பார்க்க இரண்டு ஆசிரியர்கள், இவர்களுக்கு மேலாகத் தலைமைக் கண்காணிப்பாளர் ஒருவர். விடைத்தாளைத் திருத்துவதற்கு மட்டும் நான்கு கோடி ரூபாயை அரசு செலவு செய்கிறது.

இவ்வளவு இருந்தும் ஒரு மாணவிக்கு மறு கூட்டலில் 59 மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைக்கின்றன என்றால் இதற்குப் பெயர் என்ன? இவ்வளவுப் பாதுகாப்பாக, தவறு சிறிதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஒருவருக்கு மேல் இன்னொருவர் மேற்பார்வை என்கிற ஏற்பாடுகள் துல்லியமாக இருந்தும் குளறுபடிகள் நடக்கின்றன என்றால் - அதற்கு ஆசிரியர்களாக இருக்கக் கூடியவர்களே காரணம் என்றால் எவ்வளவு கொடுமை!

பெரும்பாலும் நகர்ப்புறத்தில் படிக்கும் மாணவர்கள்தான் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கிறார்கள். கிராமப்புறத்து மாணவர்களுக்கு இந்த விவரம் கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நகர - கிராம பேதம் என்கிற வருணாசிரமம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது!

மதிப்பெண்கள்தான் மேற்படிப்புக்கு ஆதாரம் என்று ஆகிவிட்ட பிறகு, ஆசிரியப் பெருமக்களே, மாணவர்களின் எதிர்காலம் உங்கள் கைகளில், கவனம்! கவனம்!! கவனம்!!!



12.7.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக