வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கறுப்புச் சட்டை


20.9.1945 அன்று திராவிடர் கழக 17 ஆவது மாநில மாநாடு திருச்சிராப்பள்ளியில் தந்தை பெரியார் தலைமையில் கூடியது. அம்மாநாட்டில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வரலாற்று ரீதியான மிக முக்கிய முடிவு - இயக்கத் தோழர்கள் கறுப்புச் சட்டை அணிவது பற்றியதாகும். இயக்கத் தொண்டர்களாயிருப்போர் இயக்கக் காரியங்களைக் கவனிக்கும் போதும், கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும், கூடுமானவரையில் முழு நேரமும் கறுஞ்சட்டை அணிந்திருக்கலாம். கழக உறுப்பினர்கள் அனைவருமே சமயம் வாய்க்கும்போதெல்லாம் கறுஞ்சட்டை அணிதல் அவசியமாகும் என்று அறிவித்தார் தந்தை பெரியார்.

கறுப்புச் சட்டைப்படை அமைக்கப்படுவதற்கான தற்காலிகப் பொறுப்பாளர்களாக ஈ.வெ.கி. சம்பத், எஸ்.கருணானந்தம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்தப் படையைப் பற்றி குடிஅரசு (17.11.1945) தலையங்கம் இவ்வாறு கூறுகிறது:

கறுப்புச் சட்டைப்படை அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ அல்லது ஏதாவது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக் கொண்டு யாருக்காவது தொல்லை கொடுக்கவோ அல்லது நாசவேலை செய்து நம் மக்களையே பலி கொடுக்கவோ, நம் பொருளையே பாழாக்கிக் கொள்ளவோ அல்ல என்பதைத் தெளிவாக வலியுறுத்திக் கூறுவோம். மற்றபடி அடிப்படை எதற்காக என்றால், இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்கமும், துக்கமும் அடைந்திருக் கிறார்கள் என்பதைக் காட்டவும், அவ்விழிவை நீக்கிக் கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும், அதற்கான முயற்சிகளைச் செய்ய தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவுமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகும் என்று குடிஅரசு தலையங்கம் பேசுகிறது.

இப்படி ஒரு படை அமைக்கப்பட்டது என்றவுடன், ஆரியர்களின் வட்டாரத்தில் கிலி பிடித்துவிட்டது. அதனுடைய தீய விளைவு தான் - மதுரையில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் நடைபெற்ற கறுப்புச் சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் - வைத்திய நாதய்யர் என்ற பார்ப்பனரின் தூண்டுதலால் காலிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகும். 20 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்கள் அணிவகுத்து ஊர்வலத்தில் சென்ற அந்த மிடுக்கான அணிவகுப்பு, ஆரிய ஆதிக்கக் கோட்டையை நொறுங்கச் செய்யக் கூடிய ஒரு படையை ராமசாமி நாயக்கர் உண்டாக்கி விட்டார் - அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று திட்டமிட்டு அந்தக் கேவலத்தை அரங்கேற்றினர். அரசையும் கவனிக்கச் செய்தது. அதன் விளைவு தான் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கறுஞ் சட்டைப் படையைத் தடை செய்யப்படுவதாக உத்தர விட்டார்.

அந்த நாள்தான் இந்த மார்ச் 2 (1948). கிரிமினல் சட்டத் திருத்தத்தின் 16 ஆவது பிரிவின்கீழ் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு சட்டத்தினால் இந்தப் படையை அழித்துவிட முடிந்திருக்கிறதா? இன்றைக்கு லட்சோப லட்ச கறுஞ் சட்டைத் தொண்டர்கள் நாட்டில் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறார்களே!

வாழ்க பெரியார்!

2.3.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக