ஞாயிறு, 16 ஜூலை, 2017

பெரியார் - மணியம்மை திருமணம் குறித்து அவதூறு.! - 1


பெரியார் - மணியம்மை திருமணம் குறித்து தொடக்கத்தில் அதிர்ச்சியாகப் பார்த்தவர்கள், விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் கூட, ஒரு செவிலியராக அன்னை மணியம்மையார் இருந்து தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்த தகைமையைக் கண்டு வாயார, நெஞ்சாரப் பாராட்டத்தான் செய்தார்களே தவிர யாரும் குற்றப் பத்திரிகை படிக்கவில்லை.

உலகியலில் கூறப்படும் சாதாரண காரணங்களை தந்தை பெரியார் மீது யாரும் திணிக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்களின் துணைவியார் நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் அவர்களுக்கு வயது 54. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த 54 வயதில் தந்தை பெரியார் நினைத்திருந்தால் அந்தக் குற்றச் சாற்றுக்கே கூட இடம் இல்லாமல் போயிருக்குமே. அவர்களின் வீட்டார்கூட எவ்வளவோ வலியுறுத் தியும் கூட திருமண எண்ணத்தை அய்யா கொண்டார் இல்லை.
நாகம்மையார் மறைவு கூட ஒருவகையில் நல்லது என்றுதான் கருதினார்.

எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும், துயரமாகவும் காணக் கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிகம் சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கிற உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது. (குடிஅரசு 14-_5-_1933) என்று எழுதினார் என்றால் இதனுள் அடங்கியிருக்கும் தத்துவத்தைத் தன்னலம் துறந்த பொது மனத்தினரால்தான் உணர முடியும்.

ஒரு கட்டத்தில் துணைவியர் மறைந்தது நல்லது என்ற நிலை; இன்னொரு கட்டத்தில் தனக்கு ஒரு துணைவி தேவை என்ற நிலை அந்தத் துணையும் தனிப்பட்ட- தன் சுக வாழ்வுக்காக அல்ல. தான் வரித்துக் கொண்டு இருக்கிற புரட்சிகரப் பொது வாழ்வுக்கு, தனது தள்ளாமை, உடல் நோய் இடையூறாக இருக்கும் நிலையில்அதிலிருந்து விடுபடவும், தொண்டறம் புரிய சட்ட ரீதியாக அவர் மேற்கொண்ட முடிவும், துணிவும், எதிர்ப்புகளை சட்டை செய்யாத ஆளுமையும் அய்யாவை ஒரு தனித்தன்மை மேலோங்கும் வைரம் பாய்ந்த மனிதராகத்தான் ஜொலிக்கச் செய்கிறது.

திருமணம் இல்லாமல் 16 ஆண்டுகள் இருந்துவிட்டு 17 ஆம் ஆண்டில் துணை தேடக்காரணம் என்ன? திருமண ஏற்பாட்டுக்குப்பின் 24 ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அந்த மாபெரும் தலைவரை வாழ வைத்து, அதன் மூலம் தமிழர் வாழ்வுக்குப் பெருந்தொண்டு செய்தவர் அன்னையார் என்பதிலும் அய்யமுண்டோ?

இந்தி எதிர்ப்புப் போராட்டம், - பெல்லாரி சிறைச்சாலை, சட்ட எரிப்புப் போராட்டம், தேசிய கொடி எரிக்கும் போராட்டம், தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்புப் போராட்டம், - பிள்ளையார்  உடைப்புப் போராட்டம், -ராமன் பட எரிப்புப் போராட்டம், கோவில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் என்று அலை அலையான போராட்டங்களை அல்லவா தந்தை பெரியார் நடத்தினார்!

இந்த இடர்ப்பாடான கால கட்டத்தில் தோன்றா துணையாக இருந்தவர் அன்னை மணியம்மையார். பெரியார் மனம் விட்டு எழுதினார்!

மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன் என்று (விடுதலை 15.-10.-1962) கூறினாரே அய்யா!

என் காயலா சற்றுக் கடினமானது தான். எளிதில் குணமாகாது. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்பட வில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது. -தந்தை பெரியார் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் (17-_9-_-1967) பெரியார் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இந்தப் பார்ப்பனர்கள் அந்தத் திருமணத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? அந்த அம்மா இருந்துதானே இந்தக் கிழவரை நீண்ட காலம் வாழ வைத்தார்! நம்மவா ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு உறுதுணையாக இருந்தாரே என்கிற ஆத்திரம்தான் _ இத்தனை ஆண்டுகள் ஓடிய பிறகும் கூட அவாளின் ஆத்திர நெருப்பு அணைந்து போய்விடாமைக்குக் காரணம்! இன்னும் குமுறிக் கொண்டும் திமிறிக் கொண்டும் பார்ப்பனர்கள் கிடக்கிறார்கள்  என்பதை நம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமே!

பெரியார் மட்டுமல்ல, பெரியார் மணியம்மையார் திருமணத்தைக் காரணம் காட்டி கழகத்தை விட்டுப் பிரிந்து தனிக் கழகம் கண்ட அண்ணா அவர்களே கூட உண்மையை உணர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாரே!

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போதுஇப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை கடந்த முப்பது ஆண்டுகளாக கட்டிக் காத்து, அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சாரும் என்றார் அண்ணா. அய்யா சிறையிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகிறார். ஒவ்வொரு ஊருக்கும் தோழர்கள் தந்தை பெரியார் அவர்களை அழைக் கின்றார்கள். அந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் வெளியிட்ட அறிக்கையை நோக்குங்கள்.

-  (விடுதலை 8.6.1958)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக