திங்கள், 17 ஜூலை, 2017

இராமலிங்க அடிகள்


வள்ளலார் என்று உள்ளம் உருக ஏற்றிப் போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகளார் பிறந்த நாள் இந்நாள் (1823).

தொடக்கத்தில் மனுதர்மம், வருணதர்மம், ஆசாரம், ஆகமம் சாத்திரம் என்னும் சகதியில் உருண்டு புரண்டு கிடந்த இவர், பிற்காலத்தில் தெளிவு பெற்று, இந்தப் பார்ப்பனீயப் பாழும் சாக்கடையிலிருந்து, தாம் வெளியேறியது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் கரை சேரகருத்து சூடத்தை வழங்கிய ஒப்பிலா மணியாக ஒளி வீசினார்.
சாதியிலே, மதங்களிலே
சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே
கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து
அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே நீர்
அழிதல் அழகல்லவே!

என்று உலக மக்களுக்கே கூட ஒளிப்பாதை காட்டினார். உருவ வழிபாடு செய்து கடந்த மக்கள் மந்தையிலே ஒளி வழிபாடு என்ற உருவமற்ற ஒன்றை வெளிச்சமாகக் காட்டி ஆயிரம் ஆயிரம் காட்டுவிலங் காண்டித்தனத்திற்கு மூடு விழா நடத்தினார் - அந்தவகையிலே அது அக்கால கட்டத்திலும் புரட்சிதான்.

அதைக்கூடப் பொறுக்க மாட்டாமல்தான் அவரது மரணம் ஒரு சதிப் பின்னலில் நிகழ்ந்திருக்கிறது.

எந்த உருவ வழிபாடு கூடாது - ஒளி வழிபாடு தான் தேவை என்று அருள் பிரகாசர் செயல்படுத்தினாரோ, அவர் உருவாக்கிய சத்தியஞான சபையிலே பார்ப்பனப்  புரோகிதன் உள்ளே புகுந்து, இந்து மத உருவ வழிபாடுகளை நடத்தி, வள்ளலாரின் வேட்கையைச் சுட்டுப் பொசுக்கினான்.

நீண்டகால போராட்டத் திற்குப்பிறகே மானமிகு கலைஞர் ஆட்சியில் அந்தப் புரட்டன் வெளியே தள்ளப்பட்டு அடிகளாரின் ஆசை நிறை வேற்றப்பட்டது.

ஹிந்து மகா சமுத்திரத்திற்குள் மூழ்கி முத்தெடுக்க முனைந்திருக்கும் சோ ராமசாமி போன்ற பார்ப்பனர்கள், இராமலிங்கனாரின் கடைசி காலச் சிந்தனைகளைக் காயடித்து தொடக்கத்தில் அவர் கூறியதை எடுத்துக்காட்டி வழக்கம்போல வரலாற்று உண்மைகளுக்குமேல் காவிச்சாயம் பூசக் கிளம்பியுள்ளனர்.

ராமலிங்கத்தின் புலமையும், அறிவும் பலரையும், கவரத் தொடங்கியது. மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலையும் அவர் எழுதினார் (துக்ளக், 22.9. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3) என்று சோ குறிப்பிட்டுள்ளார்.

இதே மனு நூலைப் பற்றி பிற்காலத்தில் வடலூரார் என்ன எழுதியுள்ளார்?

மயிலாடுதுறை முன்ஷீப் வேதநாயகம் பிள்ளை (1826-1889) எழுதிய நீதி நூலுக்கு இராமலிங்கனார் கொடுத்த சாற்றுக் கவியில் மனு நூலைப்பற்றி என்ன சொல்கிறார்?
வேதநாயகம் படைத்த இந்த நீதி நூலுக்கு முன் மனுநீதி எல்லாம் வெறும் கயிற்று நூலே என்று பாடியுள்ளாரே!
இதற்குப்பிறகும் சோக்கள் கயிறு திரிப்பதை என் னென்பது!

5.10. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக