ஞாயிறு, 16 ஜூலை, 2017

வெட்கமில்லை


மத்திய அமைச்சர் வயலார்ரவி குருவாயூர் கிருஷ்ணன்  கோயிலில் தனது எடைக்கு எடை சர்க்கரையைக் காணிக்கையாகக் கொடுத்துள்ளார். பீதாம்பரப்பட்டு, கதளி எனும் வாழைப் பழங்களையும் காணிக்கையாகக் கொடுத்தாராம். நீண்ட நேரம் கோயிலில் தியானத்தில் ஆழ்ந்தாராம்.

நம் நாட்டு அரசியல்வாதிகள் இப்படிப் பக்திப் பழமாகக் காட்டிக் கொள்வது ஒன்றும் அதிசயமல்ல.
இதே குருவாயூரப்பன் கோயிலில் இதே வயலார் ரவிக்கு எப்படியெல்லாம் அவமதிப்பு நடந்தது என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வயலார் ரவியின் பேரன் ராஜீவ் கிருஷ்ணாவுக்கு அன்னபிரச்சானம் (முதன் முறையாகக் குழந்தைக்கு உணவு ஊட்டும் சடங்கு) குருவாயூர் கோயில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சி நடந்த மறுநாள் அந்தக் கோயிலில் என்ன நடந்தது? புண்யாகவசனம் நடத்தினார்கள்  அதாவது தீட்டுக் கழித்து உள்ளனர்.

அதற்குக் காரணம் என்னவாம்? வயலார் ரவியின் மகன் மணந்து கொண்டது ஒரு கிறிஸ்துவப் பெண்ணையாம். கிறிஸ்துவப் பெண்ணுக்குப் பிறந்த பிள்ளைக்கு குருவாயூர் கோயிலில் எப்படி அன்னபிராச்சனம் நடத்தலாம்? அதற்காகத்தான் தோஷம் கழிக்கும் நடவடிக்கையாம்.

(பிண்டம் பிடிப்பதில்கூட பிர்மா மதம் பார்த்துதான் செயல்படுகிறோரோ!)

சரி.. அந்தச் சடங்கு நடப்பதற்குமுன் அது கிறிஸ்துவக் குழந்தை என்று தெரியாதா? ஏன் அப்பொழுதே தடுக்கவில்லை? இங்குதான் இருக்கிறது அவர்களின் கோயில் பிசினஸ்; அன்னபிராச்சனம்  என்பதற்கும் ஒரு வசூல்அதன்பின் தீட்டுக் கழிப்பதற்கும் ஒரு வசூல்

இப்பொழுது பாருங்கள். அதே குருவாயூரில் வயலார் ரவி எடைக்கு எடை காணிக்கை கொடுக்கிறார். அதனை சாங்கோ பாங்கமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

கொள்ளு என்றால் வாய் திறப்பு  கடிவாளம் என்றால் இறுக மூடலோ!

வயலார் ரவியின் குடும்பம் இப்பொழுது ஒட்டு மொத்தமாக இந்துக் குடும்பமாகி விட்டதா?

கோயில் கும்பலுக்கும் வெட்கமில்லை; வயலார் ரவி போன்றவர்களுக்கும் வெட்கமில்லை. பக்தி என்றால் வெட்கமும் அறிவும் கெட்ட இடம் தானே!

18.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக