கடந்த ஞாயிறு வாரமலர் (6.6. 2010 ) ஒன்றில் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
சமீபத்தில் டி.வி.யில் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். நாயகனிடம் சண்டையிட்டுத் தோற்றுவிடுகிறான் வில்லன். அவனுக்குத் தலையில் பூ வைத்து, வளையல் அணிவித்து, அவமானப்படுத்துவதுபோல் ஒரு காட்சி அப்படத்தில் இடம் பெற்றிருந்தது.
இந்தக் காட்சி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. தோல்வி அடைந்தவர் தலையில் பூ வைத்து, வளையல் அணிந்து கொள்ள வேண்டும் என்றால், வளையல் அணிபவர் எதற்கும் உருப்படாதவர் என்று அர்த்தமா? பல திரைப்படங்களில், இதுபோன்ற காட்சி இடம் பெற்று வருவது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
சினிமாக்காரர்களே, சேலை கட்டுவது, பொட்டு வைப்பது, வளையல் அணிவது போன்ற பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களை, தோல்வியின் அடையாளங்களாக சித்திரிக்காதீர்கள், ப்ளீஸ்!
- த. மாஸ்கோராணி, அறந்தாங்கி
இதில் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்ளலாம். கடிதம் எழுதியவருக்குக்கூட தெளிவு இல்லை. அரைகுறையாகத்தான் கருத்துகளைக் கூறிட முயற்சி செய்துள்ளார்.
தோல்வி அடைந்த வில்லனின் தலையில் பூ வைப்பது, வளையல் அணிந்து கொள்ளச் செய்வதன் மூலம் எதை வெளிப்படுத்துகிறார்கள்?
பூவையும், வளையல்களையும் அணிந்து கொள்பவர்கள் பெண்கள்தானே?
கோழை என்று ஒருவரை சித்திரிப்பதற்கு இந்த பொருள்களை அணிவிக்கிறார்கள் என்றால், இதன் பொருள் பெண்கள் என்றால் கோழைகள் என்பதுதானே?
சிலர் சண்டை போட்டுக்கொள்ளும்போதும் கூட ஒரு சில சொற்களைப் பயன்படுத்துவதைக் கேட்க முடிகிறது.
என்னை என்ன பொட்டச்சி என்று நினைத்துக் கொண்டாயா?
நான் என்ன சேலையா கட்டியிருக்கிறேன்?
என் கையில் வளையலா போட்டிருக்கிறேன்? என்று ஆண்கள் பேசுவது அவர்-களின் அகம்பாவத்தையும், பெண்கள் என்றால் பேடிகள் என்று நினைக்கும் ஆதிக்க மனப்பான்மையையும்தான் இவை காட்டுகின்றன.
இந்தக் கடிதத்தை எழுதியிருப்பவர் என்ன சொல்கிறார்? பொட்டு வைப்பது, வளையல் அணிவது பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்கள்; இவைகளையே தோல்வியின் அடையாளங்களாக சித்தரிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறார்.
இந்தச் சின்னங்களெல்லாம் உண்மையில் பெண்களுக்குப் பெருமை சேர்ப்பதில்லை என்பதை முதலில் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களை இது மாதிரியான அணிகலன்கள் என்கிற கூண்டுக்குள் சிக்க வைத்து, அவர்களின் அறிவுத் திறனையும், உடல் வலிமையையும் பலவீனப்படுத்துகிறார்கள் என்பதை நினைக்க வேண்டும்.
இப்படி பூவும், பொட்டும், வளையல்களும் அணிந்து கொள்ளும் பெண்களின் கணவன்மார்கள் இறந்துவிட்டால், இவற்றையெல்லாம் துறந்துவிட வேண்டும் என்பதன் பொருள் என்ன? விதவை என்ற முத்திரை குத்தி அவமானப்படுத்தும் ஏற்பாடுதானே? அதே நேரத்தில் மனைவி மரணம் அடைந்தால் கணவன் இழக்கவேண்டியது ஒன்றும் இல்லையே! ஆண் பெண்களுக்கிடையே இருக்கும் இந்த வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டால் இந்த அடையாளங்கள் எல்லாம் பெண்கள் ஆண்களின் உடைமைகள் என்பதை அறிவிக்கும் விளம்பரப் பலகை அல்லாமல் வேறு என்னவாம்?
8.6. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக