சனி, 15 ஜூலை, 2017

பார்ப்பனரைப் பழிக்காதே! அது மகா பாவம்


அரசர்களை அண்டிப் பதவி பெறுவதே அவர்கள் நோக்கம் என்று  ஆபி எழுதுகிறார். இதற்குச் சரிதம் அனேக சான்று தருகிறதுபுராண இதிகாச கால மன்னர்கள் ரிஷிகளிடமும் முனிவர்களிடமும் பயபக்தி விசுவாசத்துடன் நடந்துகொண்டனர். தமது மணிமுடியையும் காணிக்கையாகத் தந்தனர், அவர்கள் எது கேட்டா லும் வழங்கினர்; அவர்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தனர் என்றெல்லாம் படிக்கிறோம். சரிதகால மன்னர்களிடம் சர்மாக்களும், அய்யர், அய்யங்கார்களும், திவான்களாகவும், மந்திரிகளாகவும் வாழ்ந்தனர். இதோ இன்றும், திருவிதாங்கூருக்கு யார் திவான்? சர். சி.பி. அய்யர்தானே! பரோடாவிலே, சர். வி.டி. கிருஷ்ணமாச்சாரி, மேவாரிலே சர். விஜயராகவாச்சாரி என்றுதான் பட்டியல் காணமுடியும். நமது மாகாண சர்க்கார் சீஃப் - செக்ரடரியாக இருந்து இன்று ஆலோசகராக இருப்பவர், ஒரு எஸ்.விஇராமமூர்த்தி அய்யர்தான்! நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர், ஒரு இராஜகோபாலாச்சாரி யார்தான்! நமது மாகாண சட்ட நிபுணராக அட்வகேட் ஜெனரலாக இருப்பவர், ஒரு சர். அல்லாடி அய்யர்தான்! ஆபி டியூபா 1807-இல் கூறினது, இன்றும் பிரத்யட்ச உண்மையாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக - அதுவல்ல பொருத்தமான வாசகம்-கைப்புண்ணாக இருக்கிறது என்று கூறுவேன். அதுதான் பொருத்தமான உபமானம்!

அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர் என்று, ஆபி டியூபா எழுதுகிறார். சிண்டு முடிந்துவிடுவதிலே, கலகமூட்டுவதிலே, அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். இல்லாமலா கலகத்தையே காரியமாகக் கொண்ட ஒரு தேவன் உண்டு என்ற கதையை வைத்திருக்க ஆரிய மனம் இடம் தந்தது? நாரதரைத் தொழும் பக்த சிகாமணிகளல்லவா அவர்கள்! எங்கே போகும் அந்தப் பலன்! நமது இனத்தின் தலையிலே வந்து விடிகிறது!!

திறமைசாலிகள் என்பதற்காகப் பார்ப்பனரைப் பார்த்திபர்கள் பதவியில் அமர்த்தினர் என்பது மட்டுமல்ல; மற்ற மக்களிடம் உயர்ஜாதி என்று பெருமை பேசி அவர்களைக் கட்டுப்படுத்தும் ``சக்தியை ஆரியர் பெற்றிருப்பதால், அவர்களை வேலையிலே இருக்கச் செய்தால், சாதாரண மக்களின் சள்ளை இராது என்பதற்காகவே வேந்தர்கள் வேதியரை வேண்டினர் என்ற உண்மையையும் ஆபி டியூபா எழுதுகிறார்

இன்றும் ஒரு பள்ளியிலே ஆசிரியராக இருப்பினும், கோயிலிலே பூசை புரிவோராக இருப்பினும், மோட்ச லோகத் தரகராக இருப்பினும், சிற்றுண்டி விற்பவனாக இருப்பினும் அவர்களிடமும் நமது இனத்தவர் எவ்வளவு அடங்கி ஒடுங்கி உள்ளனர் என்பதைப் பாருங்கள்

பார்ப்பனரைப் பழிக்காதே! அது `மகா பாவம் என்று கூறும் மனப்பான்மை இன்றும் இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர்கள் அசகாய சூரரல்ல, வீரம் அவர்களுக்குக் கிடையாது, கோழை உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் என்று, ஆபி டியூபா கூறுகிறார். படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே, எம் இனமக்கள் வீழ்ந்து கிடப்பதனா லன்றோ? ஆபி டியூபா போன்ற அறிஞர்கள் ஆரியரின் குணத்தினை எடுத்துக் கூறியிருப்பதை, நிடுநிலை நின்று யோசிப்பவர் ஆரியரைப் போற்றி வாழ்வாரா? என்று கேட்கிறேன்.

நூல் : ஆரியமாயை

ஆசிரியர் “ அறிஞர் அண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக